நண்பர்களுடன் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்: குட்டை நீரில் மூழ்கி பலியான சோகம்..!!

Author: Rajesh
21 March 2022, 9:18 am
Quick Share

கோவை: கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் பகுதியில் உள்ள குட்டை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் 15, வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தர் இவரது மகன் சரண் (18). இவர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதாக கூறிக்கொண்டு கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மண்டம்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள குட்டையில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குட்டையில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை அடுத்து உடன் வந்த சக நண்பர்கள் மாலை வீடு சென்ற நிலையில் பள்ளி மாணவனின் தந்தை அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது சரணை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக அவரது தந்தை காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் உடன் சென்ற பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் குட்டையில் குளித்துக் கொண்டிருக்கும்போது காணவில்லை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கி பலியான சரணை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்டை நீரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 653

0

0