8 வருடங்களாக தீண்டாமை சுவரால் சிரமப்பட்ட தோக்கமூர் கிராமம் ; போராட்ட எச்சரிக்கையால் இடித்து அகற்றம்..!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 12:58 pm
Quick Share

திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே தோக்கமூர் கிராமத்தில் 8 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட 90 மீட்டர் நீளமும், 8 அடி உயரமும் கொண்ட தீண்டாமை சுவர் அகற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தோக்கமூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100 பட்டியலின குடும்பங்கள் வசிக்கின்றன. பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் விவசாயக் கூலிகளாகவே வாழ்ந்து வரும் நிலையில், தோக்கமூர், எல் ஆர்மேடு, எடகண்டிகை என மூன்று ஊருக்கும் பொதுவானதாக திரௌபதியம்மன் கோவிலும் கோவிலைச் சார்ந்த 2.94 ஏக்கர் நிலமும் உள்ளது.

பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலை கடை உள்பட பல்வேறு தேவைகளுக்கு இந்த அரசு நிலத்தையே நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வீடுகளை சுற்றி 8 அடி உயரமும், 90 மீட்டர் நீளமும் கொண்ட சுற்று சுவரை ஒட்டிய இடத்தில் சிமெண்ட் கற்களால் ஆன முள்வேலியை கோயில் நிர்வாக தரப்பினர் அமைத்தனர். அந்த இடத்தை பயன்படுத்திய நபர்கள் முள்வேலியை உடனடியாக அகற்றுமாறு அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை தாமதமானதால், இந்த விவகாரத்தை பல சமூக அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் கையில் எடுத்தது.

இதனால், பிரச்சனைக்கு உரிய முள் வேலி மற்றும் தீண்டாமை சுவரை அகற்ற வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தும், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு அக்டோபர் 5ம் தேதிக்குள் தீண்டாமை சுவர் அகற்றப்படாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டதை அடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரி அறிவுறுத்தலின்படி, வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது.

சிமெண்ட் கற்களால் அமைக்கப்பட்ட முள்வேலியையும் அகற்ற வேண்டுமென கிராம மக்கள் வட்டாட்சியர் கண்ணனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சமரச பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, புகார் அளித்தால் திரௌபதி அம்மன் கோவிலை சுற்றி போடப்பட்ட முள்வேலி அகற்றப்படும் என வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலா ன வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

Views: - 354

0

0