ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம்.. வேன் – பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இளைஞர்கள் இருவர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 2:12 pm
Accident Dead -Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டை அருகே அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

மணலூர்பேட்டை சேர்ந்த சேகர் மகன் எழில் (வயது 28), பெரியான் மகன் தினேஷ்குமார் (வயது 25), மணி மகன் பிரகாஷ்(வயது 27) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனம் ஒன்றில், மணலூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, சாங்கியம் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த வேன் மீது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த எழில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த தினேஷ்குமார் மற்றும் பிரகாஷ் உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் உயிரிழந்தார்.

பிரகாஷ் மேல்சிகிச்சைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, மணலூர்பேட்டை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தென்கரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரபத்திரன் (வயது 40) என்பவரை கைது செய்தும், விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதிகாலை வேளையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது..

Views: - 464

0

0