ஆர்எஸ்எஸ்சை வீழ்த்த நினைத்த முன்னாள் பிரதமர்களின் முயற்சி என்னாச்சுனு தெரியுமா? திமுகவுக்கு வார்னிங் கொடுத்த வானதி சீனிவாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2022, 2:25 pm
Vanath Warning - Updatenews360
Quick Share

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிற்கும், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, தமிழக காவல் துறை தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, இந்த ஆண்டுதான் முதல் முறையாக நடப்பது போல சில அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழகத்திலும் தொடங்கப்பட்டது.

1940-ல் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழகத்தில் இருந்து இருவர் பங்கேற்றனர்.

நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே தமிழகத்தில், விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டும் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கும் ஜனநாயக இயக்கம். 97 ஆண்டுகளை நிறைவு செய்து, 98-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2025-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தயாராகி வரும் இயக்கம்.

அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு, அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையைப் பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் அதன் தொண்டர்கள் சீருடை அணிந்து அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்வார்கள். அணிவகுப்பு முடியும் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும். அணிவகுப்பில் எந்த கோஷமும் போட மாட்டார்கள்.

இப்படி 97 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் எந்த வன்முறையும் நடந்ததில்லை. ஆர்.எஸ்.எஸ். அரசியல் இயக்கம் அல்ல. சமூக, கலாசார, தேசபக்தி இயக்கம்.

தேசத்திற்காக தானாக முன்வந்து உழைக்கும் தன்னார்வலர்களை உருவாக்கும் அமைப்பு. அதனால் தான், உயர் நீதிமன்றமும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்தது.

உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுதி அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை ஆர்.எஸ்.எஸ். மீறியதாக எந்த புகாரும் இதுவரை இல்லை. நாட்டில் எந்த மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தடை இல்லை.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுத்துள்ளது, எந்த விதத்திலும் நியாயமல்ல. இதுபோன்ற இடையூறுகள் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என, யாராவது கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும்.

ஆர்.எஸ்.எஸ்.ஸை வீழ்த்த முன்னாள் பிரதமர்கள் பண்டிட் நேரு, திருமதி இந்திரா காந்தி திரு. ராஜீவ் காந்தி ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்ததை, இந்து விரோத தி.மு.க. அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எந்த நேரு, ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்த்தாரோ அந்த நேருவே, 1963-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் சீருடையுடன் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு அழைப்பு விடுத்தார். வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகிய இரு பிரதமர்களை தந்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு தமிழக காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 421

1

0