கோவை கோட்டைமேடு பகுதியில் ஆளுநருக்கு எதிராக சர்ச்சை போஸ்டர்… PFI மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெற வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
13 May 2022, 4:57 pm
Quick Share

கோவை : கோட்டை மேடு பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறாக தமிழக ஆளுநர் பேசியதாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தீவிரவாத அமைப்பு என அண்மையில் பேசியிருந்தார். அவரது இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று கோவை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோவை கோட்டைமேடு பகுதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சுக்கு எதிராகவும், கண்டனம் தெரிவித்தும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், “பாப்புலர் பிரண்ட் குறித்து அவதூறாக பேசிய தமிழக ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறோம்.ஆளுநரே அவதூறு குற்றச்சாட்டை உடனடியாக திரும்ப பெறு ! RSS க்கு ஆதரவாக மக்கள் இயக்கங்கள் மீது வன்மத்தை காட்டாதே.! ஒன்றிய அரசே தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெறு!,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாள தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 538

0

0