‘மெட்டீரியல் சப்ளை மட்டும்தான் என்னுடைய வேலை’… கவுன்சிலரிடம் உரிமை தொகை திட்ட செயல் அலுவலரின் பொறுப்பற்ற பேச்சு..!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 8:32 pm
Quick Share

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தகவல் கேட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கவுன்சிலரிடம் பொறுப்பற்ற முறையில் பேசும் செயல் அலுவலரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாம்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட முகாம்களில் உடல் ஊனமுற்ற மற்றும் உடல் நலம் சரியில்லாத பெண்களுக்கு பதில், அவரது கணவன்மார்கள் மனுக்களை வழங்க வந்தபோது, முகாம்களில் உள்ள அதிகாரிகள் மனுக்களை பெறவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலர் ஜீவநாதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 15வது வார்டு கவுன்சிலர் பூலோகராஜா கேட்டார். அப்போது, செயல் அலுவலர் அந்த கவுன்சிலரிடம், “இந்த கதை எல்லாம் என்கிட்ட கேட்க கூடாது, எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னுடைய வேலை மெட்டீரியல் சப்ளை செய்வது மட்டுமே,” என பொறுப்பில்லாமல் திமிராக பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது கன்னியாகுமரி பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசின் திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு ஒரு பேரூராட்சி மன்ற உறுப்பினரிடம் கூட பொறுப்பாக பதில் கூற முடியாத இந்த செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Views: - 223

0

0