ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு ; மாலை வரை பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா..? .

Author: Babu Lakshmanan
27 February 2023, 7:50 pm
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 52 மையங்களில் 238 வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குபதிவு நிறைவு பெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, கடந்த மாதம் 4ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட்டனர்.

தொடர்ந்து, வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை செலுத்தினர். அவ்வபோது வாக்குபதிவு பதிவு சதவீதம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வாக்குப்பதிவு 6 மணி நிறைவு பெற்ற நிலையில், வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு மையத்தின் கேட்டு மூடப்பட்டது. இறுதியாக 7 மணி நேர நிலவரப்படி 74.69 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. ஆண்கள் 82,021 பேரும், பெண்கள் 87,907 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேரும் வாக்களித்துள்ளனர்.

இதன் பின்னர் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற வாக்குச்சாவடியில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவ படை மற்றும் போலீசார் பாதுகாப்புடன், சித்தோடு பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

மேலும், மூன்று பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட காரணமாக பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.

Views: - 297

0

0