குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தான் பொறுப்பு ; விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு…

Author: Babu Lakshmanan
4 July 2023, 7:55 pm
Quick Share

மருத்துவ துறை அமைச்சர் ஓடலாம் வாங்க என்று தான் சொல்கிறாரே தவிர, ஏழை மக்கள் பயன் பெறும் அரசு மருத்துவமனையை முறையாக நிர்வாகம் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட குழந்தைக்கு கை அகற்றப்பட்ட நிலையில், குழந்தையை நேரில் பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது :- வென் பிளான் போடும்போது தான் தவறு ஏற்பட்டுள்ளதாக குழந்தையின் தாய் தெரிவித்தார். முறையாக கவனித்து இருந்தால் குழந்தையின் கை அகற்றக் கூடிய சூழல் ஏற்பட்டு இருக்காது. குழந்தைக்கு சிகிச்சை வழங்கி முறையாக பராமரிக்காதது தான் குழந்தை பாதிக்கக் காரணம். குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை கொண்டு விசாரணை செய்வது ஏற்புடையதல்ல.

ஆறுதல் சொல்ல வேண்டிய அமைச்சர் பெற்றோரை விமர்சனம் செய்கிறார். அதுவும் ஏற்புடையது அல்ல, வன்மையாக எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தவறை விசாரிக்க அரசு மருத்துவர்களை நியமிப்பது ஏற்புடையது அல்ல. குழந்தையின் சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு சப்பை கட்டு கட்டி முட்டுக் கொடுப்பதை விட்டுவிட்டு, மேலும், இது போன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க அரசு எச்சரிக்கையுடன் கவனத்துடனும் மருத்துவத் துறையை சீர்படுத்த வேண்டும்.

மருத்துவத்துறையில் முறையாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. மிகப்பெரிய கட்டமைப்புடன் இயங்கும் தமிழக மருத்துவத் துறையை முறையாக பராமரிக்கவில்லை என குற்றம் சாட்டினார். இனிமேல் இதுபோன்று தவறுகள் நடக்காமல் இருக்கவும், தற்போது நடந்த தவறுக்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திறன் அற்றவராக உள்ளார் என நேருக்கு நேர் குற்றம் சாட்டுவதாக கூறினார்.

Views: - 522

0

0