பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் பட்டியலின மாணவி : வைரலாகும் வீடியோ… சர்ச்சையில் சிக்கிய அரசுப்பள்ளி..

Author: Babu Lakshmanan
29 March 2022, 3:57 pm
Quick Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அரசுப்பள்ளியில் பயின்று வரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த ஆனம்பாக்கம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. 10-ஆம் வகுப்பு வரை செயல்படும் இந்த உயர்நிலைப்பள்ளியில் 267 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

ஆனம்பாக்கம் ஊராட்சியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் இங்கு உள்ள துவக்கப்பள்ளியிலும், நடுநிலைப்பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பட்டியலின மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் ஆவேசமாக கேள்விகளை எழுப்பினர். எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் படிக்க தான் அனுப்புகின்றோம், கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக அனுப்பவில்லை. எங்கள் சமூகத்தை மட்டும் ஏன் இப்படி வேலை வாங்குகிறீர்கள் என கேட்டனர்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத தலைமையாசிரியர் அப்படி ஏதும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். அதேபோல் கூட்டத்திலிருந்த ஊராட்சிமன்ற தலைவர் ஐயப்பன் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம், இந்த விஷயம் சாதாரண விஷயம் எனக் கூறி பெற்றோரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில்தான் பட்டியலின மாணவி ஒருவர் பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை கண்ட சமூக ஆர்வலர்கள் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Views: - 756

0

0