மத்திய சென்னையை குறிவைக்கும் பாஜக பிரமுகர்…? சென்னை மக்களின் கோரிக்கை மனுக்களோடு டெல்லியில் முகாம்..!!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 2:44 pm
Quick Share

மத்திய சென்னையை குறிவைக்கும் பாஜக பிரமுகர்…? சென்னை மக்களின் கோரிக்கை மனுக்களோடு டெல்லியில் முகாம்..!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், பாஜகவினரும் சுழன்று சுழன்று தேர்தல் வேலைகளை கவனித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அக்கட்சியின் வினோஜ் பி செல்வம், சென்னையை குறிவைத்து தனது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகளை முன்நின்று செய்து கொடுத்து வருகிறார். அதேவேளையில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கே சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகள் பற்றி நேரில் கேட்டறிந்து, செய்து கொடுப்பதாக உறுதியளித்து வந்தார்.

இந்த நிலையில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, டெல்லி சென்றுள்ள பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவையும் வினோஜ் பி செல்வம் சந்தித்து பேசினார். சென்னை மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான யானைகவுனி மேம்பாலக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சென்னை மற்றும் ஜோத்பூர் இடையிலான தொடர்பு ரயிலை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் தற்போது மத்திய சென்னையை குறிவைத்து தேர்தல் பணியாற்றி வருவதால், அவர் இந்தத் தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Views: - 83

0

0