”வயிறு எறிஞ்சு சாபம் விடுறேன்”… இயக்குநர் பாலாவை சகட்டு மேனிக்கு திட்டிய தயாரிப்பாளர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2022, 2:41 pm
Director Bala- Updatenews360
Quick Share

இயக்குனர் பாலா படம் எடுக்கும் விதம் எப்படி என திரையுலகில் பலருக்கும் தெரியும். படப்பிடிப்பில் டெரராக இருப்பார்.. நடிகர்கள் மீது ஈவு இரக்கம் எல்லாம் காட்டவே மாட்டார்.

அவருக்கு திருப்தி ஆகும் வரை ஒரே காட்சியை பல முறை எடுத்து நடிகர்களை சாவடிப்பார், உதவி இயக்குனர்களை போட்டு அடி வெளுப்பார்.. என பல நல்ல பேர்கள் அவருக்கு உண்டு.

அதனால்தான் அவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் முன்வருவது இல்லை. இனி அவர் கூப்பிட்டால் கூட சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா போன்றோர் அவரின் இயக்கத்தில் நடிப்பார்களா என்பது சந்தேகம்தான். சூர்யா கூட வணங்கான் படத்திலிருந்து சமீபத்தில் விலகினார். அதனால்தான் அதர்வா போன்ற சிறிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் நிலைக்கு பாலா ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் அப்பாவாக நடித்த அழகன் தமிழ்மணி பாலாவை ஒரு பேட்டியில் திட்டி தீர்த்துள்ளார். இவர் சில திரைப்படங்களை தயாரித்தவர், எழுத்தாளரும் கூட. நான் கடவுள் படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் பேசியதாவது:

பாலா அலுவலகத்தின் அருகே என் வீடு இருந்தது. என்னை அணுகி நான் எடுக்கும் ஒரு புதிய படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என பாலா கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அதற்கு தாடி வளர்க்க வேண்டும் என சொன்னார். நானும் 8 மாதங்கள் தாடி வளர்த்த பின் படப்பிடிப்பு துவங்கியது. ஒரு காட்சியில் என் மனைவி என்னை அறைய வேண்டும். அந்த நடிகை என் கன்னத்தில் மெதுவாக அறைந்தார். ஆனால், ‘ஓங்கி அறைகிறாயா இல்லை நான் உன்னை அறையட்டுமா?’ என பாலா கத்தினார்.

எனவே, அந்த நடிகை என்னை ஓங்கி அறைந்தார். மயங்கி கீழே விழுந்தேன். அதேபோல் ஒரு காட்சியில் மேலே இருந்து தண்ணீரில் என்னை குதிக்க சொன்னார்கள். அந்த தண்ணியின் அடியில் கற்கள் நிறைய இருந்தது. பல முறை குதித்தும் டேக் ஓகே ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் என் காலில் காயம் பட்டது. கடைசியில் ‘அப்படியே செத்துப்போவோம்’ என குதித்தேன். அப்போதுதான் டேக் ஓகே ஆனது.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். எனவே, மொட்டையடித்து, தாடி மழிக்க வேண்டும். ஆனால், பாலா அதை அனுமதிக்கவில்ல்லை. 3 வருடங்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். அவர் தாடி எடுத்தால் இன்னும் 3 வருடங்கள் ஆகும். அவர் இஷ்டம் என்றார். நான் ஒரு தயாரிப்பாளன் என்பதால் தயாரிப்பாளரின் நிலைமை புரிந்து என் தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை கூட நான் செய்யவில்லை. நான் கடவுள் படத்தை பாலா 3 வருடங்கள் எடுத்ததால் நான் 3 வருடமும் தாடியுடன் இருந்தேன்.

நான் வயிறு எரிந்து சாபம் விட்டேன். பாலா இப்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். பாலா இனிமேலாவது திருந்து. இல்லையேல் காணாமல் போய்விடுவாய்’ என கோபமாக பேசினார் அழகன் தமிழ்மணி.

Views: - 439

0

0