திடீரென மாயமான 3 வயது சிறுவன்… நீண்ட நேரம் தேடிய பிறகு பக்கத்து வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி ; கதறி அழுத குடும்பம்!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 1:45 pm
Quick Share

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி மீனவ கிராமத்தில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன், பக்கத்து வீட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி ஆரோக்கிய நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சுஜின். மீன்பிடி தொழிலாளியான இவரது மனைவி மேபி வர்ஷா. இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஷகிப் சேன்டினோ என்ற மகனும், ஒருமகளும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஷகிப் சேன்டினோ, திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் பல மணி நேரம் தேடியும் சிறுவனை காணவில்லை.

இரவு பக்கத்து வீட்டு கேட் திறந்து இருந்த நிலையில் சிறுவன் அங்கு சென்றிருக்கலாம் என அங்கும் சென்று தேடியுள்ளனர். அப்போது. புதிதாக கிரகபிரவேசம் செய்யப்பட்ட அனிதா என்பவரின் அந்த வீட்டின் முன் பகுதி தரை தளத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் காணப்பட்டதால். சந்தேகமடைந்த உறவினர்கள் தண்ணீர் தொட்டிக்குள் பார்த்துள்ளனர். அப்போது, ஷகிப் சேன்டினோ தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்

உடனடியாக அவரை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், புதிதாக கட்டப்பட்டு கிரகபிரவேஷம் செய்த வீட்டில் தரைதளத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் மூடி பாதுகாப்பின்றி இருந்ததும், சிறுவன் வீட்டிற்குள் செல்லும் போது அதில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 209

0

0