விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியவரை பிடிக்க முயன்ற பெண் காவலர் கடத்த முயற்சி..! கன்னியாகுமரியில் வாலிபர் கைது…

Author: kavin kumar
23 February 2022, 1:49 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் காரில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றவரை துரத்தி பிடித்த பெண் போக்குவரத்து காவலரை கடத்த முயன்ற வழக்கில் தமிழகத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்

புதுச்சேரி கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண் ஊர்க்காவல் படைவீரர் ஜீவிதா (32). இவர் கடந்த 19 ம் தேதி காலை கடலூர் சாலை தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் உள்ள சிக்னலில் பணி செய்து வந்த போது கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ஒரு கார் நான்குமுனை சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. இதைக்கண்ட பெண் ஊர்க்காவல் படைவீரர் ஜீவிதா அங்கிருந்தவர்கள் உதவியுடன் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். பின்னர் காரை ஓட்டிச்சென்ற டிரைவரை விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது குறித்து கேட்டு காரை கிருமாம்பாக்கம் போக்குவ காவல் நிலையத்திற்கு எடுத்து வர சொல்லி காரில் அமர்ந்து கொண்டு சென்றுள்ளார்.

கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே வந்த போது அந்த வாகன ஒட்டி நிறுத்தாமல் வேகமாக கடலூரை நோக்கி சென்றதால் தன்னை கடத்த முயல்வதை அறிந்த ஜீவிதா காரை நிறுத்த கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஜீவிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் பெண் காவலர் பெண் காரின் ஸ்டியரிங்கை திருப்பி சாலை ஓரத்தில் நிற்குமாறு செய்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த டிரைவர் மேலும் அந்த காவலரை தாக்கி கீழே தள்ளி விட்டுவிட்டு அவர் கையில் வைத்திருந்த வாக்கி டாக்கியை பறித்து கொண்டு சென்றுவிட்டார்.

காயமடைந்த பெண் காவலரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் இது குறித்து அவர் தவளகுப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காரின் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் ஷாஜி என்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர், கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் போது புதுச்சேரியில் விபத்து ஏற்ப்படுத்தி விட்டு பெண் காவலரை தாக்கிவிட்டு சென்றது தெரியவந்தது, இதனை தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 681

0

0