திமுகவுக்கு இப்பவே வயிற்றில் புளி கரைய துவங்கியிருச்சு… 2024ல் தான் உண்மையான பொங்கல் கொண்டாட்டமே இருக்கு : ஜெயக்குமார்

Author: Babu Lakshmanan
14 January 2023, 6:46 pm
Quick Share

சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால், அன்றைக்கு தான் உண்மையான பொங்கலாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- பழையன கழிதலும், புதுவன புகுதலும் என போகி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். அதுபோலதான் திமுக அரசு கழிந்து மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் வளரும். அதுதான் அதிமுக தொண்டர்கள் நினைவாக உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் சூழலில் ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து அனைத்து மாநில கட்சிகளிடம் கருத்து கேட்கக்பட்ட நிலையில் அதிமுக சார்பில் இன்று பதில் அளிக்கப்பட்டு உள்ளது. கடிதத்தில் என்ன உள்ளது என்பதை வெளியே சொல்ல முடியாது. சமிகைகள் மட்டுமே சொல்ல முடியும், ஒரே நாடு ஒரே தேர்தலை திமுக மட்டும் தான் எதிர்க்கிறது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடந்தால் உண்மையான பொங்கல் விழா அளவுக்கு இருக்கும். இப்போதே திமுக வுக்கு வயிற்றில் புளி கரைய துவங்கி விட்டது, என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவை பொறுத்தவரை ஆளுநர் விவகாரத்தில் மாறி மாறி செயல்படுகின்றனர். அவர்களுக்கு தேவை என்றால் ஆதரவு, தேவை இல்லை என்றால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்திலும், எதிர்கட்சியாக இருந்த நேரத்தில், காட்டில் உள்ள விலங்குகள் போல சட்டமன்றத்தில் நடந்துகொண்டு சட்டையை கிழித்து ஆளுநரை சந்தித்தனர். அப்போது, அவர்களுக்கு ஆளுநர் தேவைப்பட்டார். தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் சட்டமன்ற மாண்புகளையும், மரபுகளையும் பல்வேறு முறை கடைபிடிக்காத கட்சி திமுக தான். எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் ஆளுநர் உரை மீது பல்வேறு விமர்சனங்களை கூறிய ஸ்டாலின், தற்போது ஆளுநர் மாண்பை மீறியதாக கூறி வருகிறார். மேலும், ஆளுனர் உரையில் அவர்கள் எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

ஆனால் அப்படி எல்லாம் இல்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. மேலும் ஆளுநர் உரை அன்று சட்டப்பேரவையில் நிகழ்ச்சிகள் குறித்து முன்கூட்டியே தெரிவித்து விடுவார்கள். அப்படி அலுவலில் இல்லாத ஒரு விஷயத்தை, சபாநாயகர் அன்று இருக்கையில் இல்லாத நேரத்தில் எப்படி தீர்மானம் கொண்டு வர முடியும். எனவே, இது செல்லாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, அவர் பொங்கல் பண்டிகை என்பது சித்திரை ஒன்றாம் தேதிதான். ஸ்டேட் பாங்க் வங்கி தேர்வை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பொங்கல் பண்டிகை அன்று நடத்த கூடாது என்றே அதிமுக நினைக்கிறது, எனக் கூறினார்.

Views: - 317

0

0