‘வாக்குறுதி கொடுத்தாங்க இன்னும் ஏதும் மாறல’.. சுகாதாரமற்று கிடக்கும் துணை சுகாதார நிலையம் ; எதிர்பார்த்து கிடக்கும் கர்ப்பிணி பெண்கள்..!

Author: Babu Lakshmanan
13 October 2022, 11:32 am
Quick Share

காஞ்சிபுரம் அருகே சுகாதாரமற்ற நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு செல்ல அச்சம் தெரிவித்துள்ள கர்ப்பிணி பெண்கள், அதனை சுற்றியுள்ள மண்டியுள்ள புதர்களை அகற்றி சுகாதார மையத்தை செப்பனிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையோர் கூலித் தொழிலும், சுயதொழிலும் செய்து வருகின்றார்கள்.

kanjipuram Primary Hospital - updatenews360

இவ்வளவு அதிக மக்கள் தொகை வசிக்கும் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடம் மிகுந்த சேதம் அடைந்து காணப்படுவதாலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நீந்தி செல்லும் அவல நிலை உள்ளதாலும், துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் அடர்ந்த முட்புதர்களில் இருந்து கொடிய விஷமுள்ள நாகங்கள் அவ்வப்போது மையத்துக்குள் வந்துவிடுவதாலும், கழிவறை சேதம் அடைந்து தண்ணீர் வசதி அறவே இல்லாததாலும், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் துணை சுகாதார நிலையத்துக்கு வர மிகவும் அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

kanjipuram Primary Hospital - updatenews360

இதனால், ஏனாத்தூர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் செல்லுகின்ற நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

kanjipuram Primary Hospital - updatenews360

கடந்த தேர்தலில் இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தருவதாக திமுகவினர் வாக்குறுதி அளித்த நிலையில், பல மாதங்கள் கடந்தும் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகமோ அல்லது மாவட்ட சுகாதாரத்துறையே எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

kanjipuram Primary Hospital - updatenews360

மழைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக இந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து விட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வசிக்கும் இந்த பகுதியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Views: - 388

0

0