நாளை நள்ளிரவு மூடப்படுகிறது திருச்சி காவிரி பாலம் : போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
9 September 2022, 10:51 am
Quick Share

திருச்சி ; மேம்பாலம் சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், திருச்சி காவிரி பாலம் நாளை நாள்ளிரவு முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் புதிய காவிரி பாலம் கடந்த 1976 ஆம் ஆண்டு ரூபாய் 102.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை தமிழக ஆளுநரின் ஆலோசகர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் பிரம்மானந்தா ரெட்டி பாலத்தை திறந்து வைத்தார்.

இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக பலமுறை சீர் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீர்படுத்தும் வகையில் பணிகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மேற்கொள்ள இருந்த நிலையில், காவிரி ஆற்றுக்கு வந்த நீர்வரத்து அதிகம் காரணமாக பணிகள் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, பாலத்தை ஏற்பட்டுள்ள விரிசல்களை சீர்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆகும்.

இதன் காரணமாக நாளை இரவு (10ம்தேதி) பாலத்தின் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்ட உள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிக்கையை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று, இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை திருச்சி திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை திருச்சி – திண்டுக்கல் – சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு, முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம்.

காவிரிப் பாலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி மேற்கண்ட மாற்றுப் பாதையில் பயணம் செய்து நல்ஒத்துழைப்பு வழங்கிடும் படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தெரிவித்துள்ளார்.

Views: - 596

0

0