‘திருவிழா என் தலைமையில்தான் நடக்கனும்’.. பேச்சுவார்த்தையின் போது ஊர் தலைவர் மீது தாக்குதல்… ஊராட்சி தலைவர் அடாவடி..!

Author: Babu Lakshmanan
20 June 2022, 7:54 pm
Quick Share

திருவிழாவை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தின் போது, ஊர் கிராமணியம் மீது ஊராட்சி தலைவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் ஊராட்சியில் கோவில் திருவிழா நடத்துவதற்காக ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்துக்கு வார்டு உறுப்பினர்கள், கிராமணியம் மற்றும் நாட்டாமைகாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊர் திருவிழா நடத்துவது பற்றிய ஆலோசனையில் அனைவரும் ஈடுபட்டிருந்த நேரத்தில், அந்த கூட்டத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் குபேர் என்ற கார்த்திக் அங்கிருந்த ஊர் பெரியவர்களிடம் , “ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்களிடம் பணத்தை வசூலித்து என்னிடம் அளிக்க வேண்டும். நான்தான் ஊர் திருவிழா நடத்துவேன்” என கூறியதால் அங்கு சற்று நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.

மேலும், தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறிய கார்த்திக் திடீரென அங்கு அமர்ந்திருந்த ஊர் கிராமணி விஜயகுமாரை என்பவரை திடீரென தாக்கினார். இந்த தாக்குதலில் விஜயகுமாரின் மூக்கில் உள்ள தண்டுவடம் உடைந்து குபுகுபுவென்று ரத்தம் கொட்டியது.

நிலைகுலைந்து போன விஜயகுமாரை மீட்டு அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதைப்பற்றி விஜயகுமாரின் தம்பி முனியன் என்பவர் செய்தியாளரிடம் கூறும்போது, ஊராட்சி மன்ற தலைவர் குபேர் என்ற கார்த்திக், மறைந்த தாதா ஸ்ரீதர் இடம் முன்பு ஓட்டுனராக வேலை செய்தார். அவர்மீது பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் உள்ளது. தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றதிலிருந்து கார்த்திக்கின் அராஜகம் அதிகமாகி விட்டது. முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு விஜயகுமாரை தாக்கியுள்ளார், என வருத்தத்துடன் கூறினார்.

விஜயகுமாரை தாக்கியது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கார்த்திக் ஊர் பெரியவர்கள் மத்தியில் கிராமணி விஜயகுமாரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 525

0

0