நாட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: முழு ஊரடங்கு அறிவிப்பு…நியூசிலாந்து பிரதமர் அதிரடி உத்தரவு…!!
Author: Aarthi Sivakumar18 August 2021, 2:07 pm
வெலிங்டன்: நியூசிலாந்தில் 6 மாதத்திற்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முழு ஊரடங்கை அறிவித்து நியூசிலாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்த சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. வெறும் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை வெகு விரைவாக கட்டுப்படுத்தியது.
கோவிட் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், நியூசிலாந்தில் இதுவரை 26 பேர் மட்டுமே தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 6 மாதங்களாக அங்கு புதிய தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது, நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆக்லாந்து நகரில் எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாத ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஆக்லாந்து நகரிலும், பாதிக்கப்பட்ட நபர் அண்மையில் சென்று வந்த கோரமண்டல் நகரிலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
0
0