கோவையில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு..!!
Author: Aarthi Sivakumar18 October 2021, 2:06 pm
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் தெற்கு மண்டலம் பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 75க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த அறிவுரைகளை மாநகரட்சி ஆணையர் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.
மேலும், நஞ்சுண்டாபுரம் நொய்யல் பிரதான கால்வாயை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சில தினங்களாக பெய்த கனமழையினால் தெற்கு மண்டலம், கரும்புக்கடை, சாரமேடு, பாத்திமா நகர் போன்ற இடங்களில் மழைநீர், கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை போர்கால அடிப்படையில் சரி செய்யும் பணிகளை விரைவாக செய்திடவும், மோட்டார் பொருத்தி அதன் மூலமாக கழிவு நீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், ” தற்போது பருவமழை தீவரமடைந்துள்ளதால் தேவையில்லாத தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், ஆட்டுக்கல் போன்றவற்றால் கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்தும் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை தடுப்பது குறித்தும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இப்பணிகளை திறம்பட செய்யப்பட வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், இதர வணிக வளாகங்கள் ஆகிய இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்திட வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகளை போர்கால அடிப்படையில் உடனுக்குடன் அகற்றிட வேண்டும். மழைநீர் தேங்குவதை உடனடியாக அகற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் இரத்தினம், நிர்வாகப்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் சத்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
0
0