உடலை சுத்தம் செய்வது முதல் BP வரை வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
18 June 2023, 6:49 pm
Quick Share

அருகம்புல் ஆனது மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மூலிகையாகும். பொதுவாக அருகம்புல் கிராமங்களில் உள்ள வயல்வெளிகள் மற்றும் பசுமையான இடங்களில் அதிகம் காணப்படுகிறது. இதனைப் பறித்து தண்ணரில் நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி அருகம்புல் சாறு எடுக்கப்படுகிறது.

அருகம்புல் சாற்றை தினந்தோறும் குடித்து வந்தால், உடலில் உண்டாகும் பல நோய்களை மிக எளிதாக விரட்ட முடியும். மேலும் அருகம்புல் சாறு குடிப்பது நமது உடலில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

தினமும் அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது 100 மில்லி அளவு அருகம்புல் சாற்றினை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் குடிக்க முடியாதவர்கள் மாலையில் குடிக்கலாம். அருகம்புல் சாற்றினை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.

அருகம்புல் இயற்கையாகவே குளிர்ச்சித்தன்மை கொண்டது. எனவே, அதிகப்படியான உடல் சூடு உள்ளவர்கள் மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் அளவு அருகம்புல் சாறு குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது.

அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை குடிப்பதால் உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. குழந்தைகளுக்கு அருகம்புல் சாற்றை பாலில் கலந்து கொடுக்கலாம்.

அருகம்புல் சாறு, இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதை தடுத்து நமது உடலில் இரத்த ஓட்டம் தடையின்றி சீராக செல்ல உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு இதயத்திற்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இரண்டுமே சரிசெய்யப்படுகிறது.

உடலின் இரத்த சுத்திகரிப்பிற்கு அருகம்புல் சாறு மிகப்பெரும் உதவியாக அமைகிறது. இரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ரத்த சோகை நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் உடலில் இருக்கும் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது.

வாயு தொல்லையால் ஏற்படும் நெஞ்செரிச்சல், பசியின்மை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அருகம்புல் சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், இவற்றில் இருந்து விடுபடலாம். நரம்புத் தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும் இவற்றில் உள்ள நார்ச்சத்து நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் செய்யவும், மலச்சிக்கலை தீர்க்கவும் மருந்தாக அமைகிறது. சிறுநீர் பெருக்கியாகவும் செயல்பட்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறுக சிறுக கரைத்து சிறுநீர் வழியே வெளியேற்றுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 469

0

0