மாலையிலும் மலைபோல உயர்ந்து நிற்கும் தங்கம் விலை : ஒரே நாளில் ரூ. 336 உயர்வு!!
7 August 2020, 4:07 pmசென்னை : நாடு முழுவதும் தங்கம் வாங்கும் சூழல் இல்லாத நிலையிலும், இதுவரை இல்லாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. இதனால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கத்தின் இறக்குமதியும் குறைந்துவிட்டது.
இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த இரு வாரத்திற்கும் மேலாக ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கத்தின் விலை இன்று உச்சத்தை தொட்டுள்ளது.
இன்று காலை வர்த்தக நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.42 உயர்ந்து ரூ.5,416 ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.336 அதிகரித்து ரூ. 43,328 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நாள்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், தங்கம் விலையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.