புதிய திருச்சி சத்திரம் பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் குளறுபடி : மாநகராட்சி மைய அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை…
Author: kavin kumar20 January 2022, 4:55 pm
திருச்சி : புதிய திருச்சி சத்திரம் பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் குளறுபடி உள்ளதாக கூறி மாநகராட்சி மைய அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த மாதம் 30-ந் தேதி திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிலையத்தில் 54 கடைகள், ஓட்டல், நவீன கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் என அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் மாதாந்திர வாடகை மற்றும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆணையர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் பொது ஏலம் தொடங்கியது.
மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகை இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி வளாகத்தில் திரண்டனர். ஏலத்தின் போது முதலில் சுமார் நாற்பத்தி மூன்று லட்சத்திற்கு கழிவறையும், இருபத்தி மூன்று லட்சத்திற்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏலம் விடப்பட்டது. இதனை தொடர்ந்து கடைகள் ஏலம் துவங்கியது. முதலாக ஆறாம் நம்பர் கடைக்கும் ஏலம் என அறிவிக்கப்பட்டது.
இதை அறிந்த ஏலத்தில் குளறுபடி உள்ளதாக கூறி வியாபாரிகள் முற்றுகையிட்டு முதல் எண் கொண்ட கடையில் இருந்து தொடர்ந்து ஏலம் விட வேண்டும் என தெரிவித்து அலுவலகத்திற்கு முன்பாக முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தற்போது எந்தெந்த கடைகள் அதிகம் கேட்டு விண்ணப்பித்துள்ளதோ அந்த கடைகளுக்கு முன்னதாக ஏலம் விடப்படும். அதனை தொடர்ந்து விடுபட்ட மற்ற கடைகள் ஏலம் விடப்படும் என அறிவித்தார். ஆனால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏலம் விடும் பணிகள் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டெண்ட்மெண்ட் சரக காவல்துறை உதவி ஆணையர் அஜய்தங்கம் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய விதிப்படி ஏலம் நடைபெறுவதாக தெரிவித்தார். இருந்த போதும் வியாபாரிகள் தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அலுவலகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
0
0