அவசர அவசரமாக வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் : முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு!!
28 September 2020, 1:03 pmபுதுச்சேரி : விவசாயிகளுக்கு எதிரான 3-சட்டங்களுக்கும் அவசர, அவசரமாக குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை நிறைவேற்றியுள்ளதை திரும்பப்பெறக்கோரி புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி உட்பட ஏராளமான காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை வீதியில் இறங்கி போராடுகின்ற நிலையை பிரதமர் உருவாக்கி உள்ளார் என்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என பேசிய அவர் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்த விவசாயிகளுக்கு எதிராக உள்ள 3 சட்டங்களை கொண்டு வரக்கூடாது என குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்த இருந்த நிலையில் அவசர அவசரமாக 3 சட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்து உள்ளார் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.