வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…

Author: kavin kumar
10 February 2022, 3:58 pm
Quick Share

தருமபுரி : வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தண்ணீர் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது வாணியாறு அணையில் இருந்து 2021-2022 ஆண்டுக்கான புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கான பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அணையின் திட்ட வரைவு விதிகளின்படி புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 65 நாட்களுக்கும் நாளொன்றுக்கு 325.84 கன அடி வீதம் பாசனத்துக்கு இன்று முதல் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 10 ஆயிரத்து 517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.

இடதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், கோழிமேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளும், பழைய ஆயக்கட்டு கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும். இப்பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரூர் உதவி ஆட்சியர் முத்தையன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 833

0

0